வேப்பமரம் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் வேப்பமரத்தின் கொட்டையிலிருந்து பெறப்படும் ‘அஷாடிராக்டிஷன்’ என்ற விலை மதிப்புள்ள வேதியல் பொருள் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அதிகமாக காண்பபடுவதில்லை.
போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏற்றமாகவே தொடர்ந்து உள்ளது. காரணம், வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. மேலும் அது ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. வேப்பமரம் ஏக்கருக்கு 60-90 மரங்கள், 15X15 அடி விகிதத்தில் வைக்கலாம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஐந்து வருஷத்தில் பலனளிக்க தொடங்கிவிடும். மரத்துக்கு குறைந்தபட்சம் முப்பது முதல் ஐம்பது கிலோ விளைச்சல் இருக்கும். நூறு–நூற்றைம்பது கிலோ விளைச்சல் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். நல்ல விளைச்சல் உள்ள மரங்களின் விதைகளை தேர்ந்தெடுத்து விதைத்தால் விளைச்சல் அதிகமிருக்கும். வேறு பக்கம் முளைத்துவரும் வளர்ந்த செடிகளையும் பிடுங்கி நடலாம். அல்லது மரத்தின் கிளையை வெட்டி அப்படியே நட்டு மரம் வளரும் காலத்தைக் குறைக்கலாம்.
மரத்துக்காக வளர்ப்பவர்கள் ஏக்கருக்கு 440 மரங்கள் நடுகிறார்கள். ஆறுவருஷதில் மரமொன்று 1,500 ரூபாயும், பத்தாம் வருஷத்தில் 7,500 ம், பதினைந்து வருஷத்தில் 10,000 ரூபாயும் விலை போகிறது. ஆறாம் வருஷத்தில் ஒன்று விட்டு ஒன்றாக சுமார் 220 மரங்களை வெட்டிவிடுகிரார்கள். அதன்பின் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை வேப்பங்கொட்டை வருமானமும், உபரியாகக் கிடைக்கிறது
வருஷத்தில் இரண்டு மாதங்கள் தான் வேலை இருக்கும். நீர் தேவை மிக மிக குறைவு. ஆரம்பத்தில் உயிர்நீர் தேவை, பின்னர் மழை நீர் போதுமானது. மிக வறட்சி வரும் காலத்தில் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். வறட்சி மாவட்டங்களுக்கு ஏற்ற வெள்ளாமை. அமிலத்தன்மை மிகுந்த/பேக்டரி கழிவுகளால் அமிலத்தன்மை ஏறிய நிலங்களை சீராக்க வேம்பு சாகுபடி நல்ல பலனளிக்கும்.
வேப்பங்கொட்டை மட்டுமின்றி, தோப்பாக வளர்க்கும்போது வேப்பம் இலைப் பொடியும் தயார் செய்யலாம், நல்ல தேவை உள்ளது. மருத்துவ குணம் உள்ள வேப்பம்பூ தேனுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கும் உண்டு. தேன் பெட்டி வைப்பதால் விதை மகசூலும் அதிகரிக்கும். தோப்பாக வளரும்போது அந்த பகுதியே குளுமையடையும், மழை ஈர்ப்பு மிக நன்றாக இருக்கும். மண்வளம் உயரும்.
வேண்டாம் வேறு வெள்ளாமை செய்யலாம் என்றாலும், வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றிற்கும் பயன்படும். மலைவேம்பை விடவும் மிக நல்ல விலைக்கு போய்விடும்.
மொத்தமாக இருக்கும் வேப்பங்கொட்டைகளை வணிகர்களோ, வேம்பு எண்ணெய் உற்பத்தியாளர்களோ வீடு தேடி வந்து வாங்கிக் கொள்வார்கள். அவ்வளவு கிராக்கி உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் வேப்பங்கொட்டையில் ஆண்டுக்கு, ஏக்கருக்கு எழுபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும். வேப்ப மரத்தில் பதினைந்து வருஷ முடிவில் ஏக்கருக்கு 22 லட்சம் வரை பெற முடியும். வேப்ப மரத்தின் ஆயுள் நூறு வருஷம் வரை. அதிலிருந்து கிடைக்கும் வேப்ப எண்ணையும், வேப்ப புண்ணாக்கும் மிகுந்த பலன் அளிக்க கூடியவை. வேப்ப மரம் மிகுந்த மருத்துவ குணம் உடையது. இம்மரத்தின் அனைத்து பாகங்களும் நல்ல பயன்கள் தருவதுடன் மிகுந்த மருத்துவப் பயன்களையும் தரக்கூடியவையாகவும், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மையும் உடையது.