தை பிறந்தால் வழி பிறக்கும்-வைகோ பொங்கல் வாழ்த்து

வைகோ பொங்கல் வாழ்த்து

கடந்து சென்ற ஆண்டு தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு அதிர்ச்சியும், அல்லலும், துன்பமும் தந்த ஆண்டாகியபோதும், இரவு நீண்டதாக இருந்தாலும், விடியல் உறுதி என்பதைக் கட்டியம் கூறி, கிழக்கு வெளுக்கின்றது; கீழ்வானம் சிவக்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று தமிழர் காலம் காலமாகக் கொண்டு இருக்கின்ற நம்பிக்கைக்கு அடையாளமாக இதோ பொங்கல் நாள் புத்துயிர்ப்புடன் புலர்கின்றது. இஞ்சியும், மஞ்சளும், செந்நெல்லும் கன்னலும் செழித்துக் கொழித்து இருக்கின்ற சூழலில், தமிழ்ப் பண்பாட்டின் மீட்டுருவாக்கத்திற்கு அடையாளமாக “பொங்கலோ பொங்கல்” என்கின்ற மங்கல முழக்கத்தில், உள்ளம் இன்ப வெள்ளத்தில் துள்ளுகின்றது,

கடும்பனி மறைந்து, கதிர் ஒளியின் வெளிச்சத்தில் புதுப்பானை உலை ஏற்றி, புத்துருக்கு நெய் விட்டு, புத்தரிசி உலையில் இட்டு, மங்கை நல்லாளோடும், மக்கட் செல்வங்களோடும் குதூகலித்துக் கொண்டாடும் இன்பத் திருநாள், நம் பண்புத் திருநாள் தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *