தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தால், தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவருவதற்கு ஆண்டுக்கணக்கில் தாமதமாகிவந்த நிலையில், தேர்வு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படுவது போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்வுக்கான திட்டமிடலில் காட்டப்படும் இந்தக் கவனம், வினாத்தாள் தயாரிப்பில் காட்டப்படவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. சமீபத்தில் நடந்த குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியலில் ஏறக்குறைய பத்து சதவீத கேள்வி-பதில்கள் குளறுபடியாக உள்ளன.
இந்தக் கவனமின்மையும் அலட்சியமும் தேர்வுகளை உடனுக்குடன் நடத்திமுடிப்பது என்ற நல்ல நோக்கத்துக்குக் கேடாக முடிந்துவிடும் என்பதைத் தேர்வாணையம் கவனத்தில்கொள்ள வேண்டும்.மாணவர்கள் பாதிக்கப்படாதவகையில் டிஎன்பிஎஸ்சி தனது உத்தேச விடைத்தாளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் இத்தகையை தவறுகள் நிகழாதவண்ணம் தீவிரக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.